தேர்வு பணி: தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை

'பொது தேர்வு பணிகளில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடாமல் 'டிமிக்கி' கொடுத்தால், பள்ளி மீது, நடவடிக்கை பாயும்' என, தேர்வுத்துறை எச்சரித்து உள்ளது.

தமிழக அரசின் பாடத்திட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மார்ச்சில் பொது தேர்வு நடக்கிறது.முதற்கட்டமாக, மார்ச், 1ல், பிளஸ் 2 பொது தேர்வு துவங்குகிறது. மார்ச், 7ல், பிளஸ் 1; மார்ச், 16ல், பத்தாம் வகுப்புக்கு தேர்வு துவங்க உள்ளது.இந்த தேர்வுகளில், 27.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்வு பணிகளுக்கு, ஒரே நாளில், 1.10 லட்சம் ஆசிரியர்களை ஈடுபடுத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக, சுழற்சி அடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு பணியில் ஈடுபடுத்த, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இந்த பணிகளில், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், உடற்கல்வி, தொழிற்கல்வி ஆசிரியர்களும் ஈடுபட உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களும் பணியில் ஈடுபட, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.இதில், தனியார் பள்ளிகள் சிலவற்றில், தங்கள் நிர்வாக பணிகளை காரணம் காட்டி, ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்புவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.இதையொட்டி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, தனியார் பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை சார்பில், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எச்சரிக்கை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:தனியார் பள்ளிகளில், தேர்வு எழுதும் மாணவர்களின் விகிதத்திற்கேற்ப, தேர்வு பணிக்கு, ஆசிரியர்களை அனுப்ப வேண்டும். ஆனால், பல பள்ளிகள், பொது தேர்வு பணிகளில், தங்கள் ஆசிரியர்களை அனுப்புவதில்லை.அதனால், தேர்வு நடத்துவது, விடைத்தாள் மதிப்பீடு போன்ற பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆண்டு, எந்த பள்ளியில், ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்பவில்லையோ, அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post