இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் உயர்நீதிமன்றம் உத்தரவு
இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, வசூலிக்கப்பட்ட அபராதம் ஆகியவை தொடர்பான புள்ளி விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது நீதிபதிகள், ‘கடந்த 3 ஆண்டுகளாக ஹெல்மெட் கட்டாயம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், ஹெல்மெட் கட்டாயம் என்பதை அரசு அமல்படுத்தவில்லை.
ஹெல்மெட் கட்டாயம் என்பதை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு தவறிவிட்டது. போலீஸ் அதிகாரிகளில் பலர் ஹெல்மெட் அணியாமல் செல்வதை பார்த்திருக்கிறோம். சட்டம் இயற்றினால் மட்டும் போதாது. அதை அமல்படுத்த வேண்டும். அரசு இதை அமல்படுத்தவில்லை. எனவே இதை நீதிமன்றமே அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும்’ என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயம் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இரு சக்கர வாகனத்தை பொறுத்தவரை பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஹெல்மெட் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இது தொடர்பாக October 22ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
0 Comments
Thanks for your comment