பள்ளி திறந்ததுமே, 'லேப்டாப்' : செங்கோட்டையன் உறுதி
''பள்ளிகள் திறந்ததும், இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப், மாணவர்கள் கையில் ஒப்படைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடு மாவட்டம், சிறுவலுாரில் நேற்று நடந்த ஒரு விழாவில், அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நடுநிலைப் பள்ளிகள் வரை, உள்ளாட்சி துறை மூலம், பராமரிப்பு பணி மேற்கொள்ள, ஓரிரு நாளில் முதல்வர் உத்தரவிட உள்ளார். டிசம்பர் இறுதிக்குள், கல்வி துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும்.'நீட்' தேர்வுக்காக, கடந்தாண்டு, இரண்டரை மாதம் மட்டுமே இடைவெளி கிடைத்தது. நடப்பாண்டில், 412 மையங்களில், 26 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இவர்களில், 1,000 பேர் மருத்துவராக வருவர். இனி எதிர்காலத்தில், பள்ளிகள் திறந்ததும், இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப், மாணவர்கள் கையில் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
பின், அவர் அளித்த பேட்டி:மாணவர்கள், முறையாக பள்ளிக்கு வருவதை, பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும், 'பயோ மெட்ரிக் திட்டம்' தற்போது, 50 பள்ளிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. 1,000 பள்ளிகளில், டிசம்பர் இறுதிக்குள் கொண்டு வரப்படும். தனியார் பங்களிப்புடன் இப்பணி நிறைவேற்றப்படும். 82 லட்சம் மாணவர்களுக்கும், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 تعليقات
Thanks for your comment