பிப்ரவரி இறுதியில் CBSE பொது தேர்வு
'அடுத்த ஆண்டு, பிப்ரவரி இறுதி வாரத்தில், பொது தேர்வுகள் துவங்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2வில், சி.பி.எஸ்.இ., பொது தேர்வுகள் தாமதமாவதால், மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வது பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பிறப் பித்த உத்தரவுப்படி, நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வை முன்கூட்டியே நடத்த, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.
அதாவது, 2019 மார்ச்சுக்குள் தேர்வை முடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ கால அட்டவணை, 15ம் தேதிக்குள் வெளியிடப்படலாம்.இந்நிலையில், அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சன்யம் பரத்வாஜ் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி இறுதியில், பொது தேர்வை துவக்க திட்டமிடபட்டுள்ளது. பிப்., இறுதி வாரத்தில்,தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் துவங்கும். அதன்பின், மற்ற முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்.எனவே, பள்ளிகள் மாணவர்களின் விபரங்களை, தாமதமின்றி பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, அந்தந்த மண்டல அதிகாரிகளை அணுகவும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.
0 تعليقات
Thanks for your comment