அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவை நோக்கி-Kalviseithigal


அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெற்றோர் தயக்கம்
தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை சரிந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், ஓராசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், அடிக்கடி விடுமுறை எடுப்பதும், அலுவலக பணிகளை கவனிப்பதுமாக உள்ளனர்.இந்த பிரச்னைகளால், அரசின் தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் குறைகிறது.
 
இரண்டு ஆண்டுகளில், புதிய மாணவர்கள் சேர்க்கையால், எண்ணிக்கை உயர்வதற்கு பதிலாக, ஏற்கனவே இருந்த மாணவர்களில், 1.40 லட்சம் பேர் வெளியேறியிருப்பது தெரிய வந்துள்ளது.தொடக்கப் பள்ளிகளில், எத்தனை மாணவர்களுக்கு, எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என, கணக்கெடுக்கும்போது, இந்த உண்மைகள், அரசுக்கு தெரிய வந்துள்ளன. 
இதைத் தொடர்ந்து, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர்; ஒரு பள்ளிக்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் என்ற விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
 
எதிர்ப்பு
அதன்படி, 4,400 ஆசிரியர்கள், உபரியாக உள்ளது கண்டறியப்பட்டு, அவர்களை, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு மாற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.'மாணவர் எண்ணிக்கை குறைந்ததால், ஆசிரியர்களை இடமாற்றம் செய்வோம் என்பது, ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்தாது.'சரிந்த மாணவர் எண்ணிக்கையை மீட்கும் வகையில், தற்போதுள்ள ஆசிரியர்களை வைத்து, கூடுதல் பயிற்சி தருவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post