கற்றலில் குறைபாடுடைய மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை
"டிஸ்லெக்சியா' எனப்படும் கற்றல் குறைபாடுடைய மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றக் கூடாது எனத் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கற்றலில் குறைபாடுடைய மாணவர்கள் விஷயத்தில் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சித் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டப்படி முதல் கட்டமாக சென்னை மாவட்டத்தில், 1,088 ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்சிஇஆர்டி) சார்பில் சிறப்புப் பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் சில தனியார் பள்ளிகளில் கற்றலில் குறைபாடுடைய மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதாக பள்ளிக் கல்வித்துறைக்குப் புகார்கள் வந்தன.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாணவர்களின் அடிப்படைத் திறனைப் புரிந்து அதை வெளிக்கொணர வேண்டும். கற்றலில் குறைபாடு இருந்தால் அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், அதற்கான பயிற்சி தருவது அவசியம். தனியார் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களைக் கணக்கெடுத்ததில் ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் 20 சதவீதம் பேர் படிக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு ஆசிரியர்களோசம்பந்தப்பட்ட பள்ளிகளோ பயிற்சி தருவதில்லை.
மாறாக மதிப்பெண் குறைவாக வாங்கினால் அவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் கொடுத்து கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர். இனி எந்தப் பள்ளியும், கற்றல் குறைபாடுக்காக, மாணவர்களை வெளியேற்றக் கூடாது.அவர்களுக்கு, அரசின் சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும், டிஸ்லெக்சியா மாணவர்களுக்கான ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
0 Comments
Thanks for your comment