உதவிப் பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலமாக நிரப்ப வேண்டும்




தமிழக அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்களுக்கான பணியிடங்களை போட்டித் தேர்வு மூலமாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு நெட், செட், பி.எச்.டி. ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு நெட், செட், பி.எச்.டி. ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.ஜவஹர் தலைமை வகித்தார்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:அரசுப் பள்ளியில் பணிபுரியும் உதவிப் பேராசிரியராகத் தகுதி பெற்ற (நெட், செட், பிஎச்டி) ஆசிரியர்களைக் கொண்டு அரசு, கலை அறிவியல் கல்லூரி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் (நெட், செட், பிஎச்டி) ஆசிரியர்களின் பணி அனுபவத்தைக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் உரிய மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தி, தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். திருச்சியில் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் பிரகாஷ், மாநிலப் பொதுச் செயலாளர் கோ.ரமேஷ், மாநில சட்டச் செயலாளர் எஸ்.கர்னல், திருப்பூர் மாவட்டத் தலைவர் பாபு ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post