வீட்டில் 'ஏடிஸ்' கொசுக்களா? 6 மாதம் சிறை
'டெங்கு காய்ச்சலை பரப்பும் வகையில், வீடுகள் சுகாதாரமின்றி இருந்தால், உரிமையாளருக்கு, ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்' என, சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில், 2017ல், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டனர்; 65 பேர் வரை உயிரிழந்தனர். எனவே, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக, 'ஏடிஸ்' கொசுவை பரப்பும் வகையில் உள்ள, சுகாதாரமற்ற வீடுகளுக்கு, அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடைமுறை தொடரும் என, அரசு அறிவித்துள்ளது.பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இதுவரை, 1,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பாதிப்பு அதிகரிக்காத வகையில், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆய்வின்போது, கொசு உற்பத்திக்கு காரணமாக வீடுகள் இருந்தால், அதன் உரிமையாள ருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். 6 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.கோடைக்காலம் என்பதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில், தண்ணீர் சேமிக்க வாய்ப்பு உள்ளது. தண்ணீர் வைக்கும் தொட்டி, பாத்திரங்களை நன்கு மூடி வைக்க வேண்டும்.அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் செயல்படும், காய்ச்சல் வார்டுகள் தொடர்ந்து இயங்கும். எனவே, காய்ச்சல் வந்தால், உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Post a Comment
Thanks for your comment