காலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி




காலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது.

இதில், பிளஸ் 1 பொது தேர்வுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வின் மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இந்த இரண்டு வகுப்புகளுக்கான தேர்விலும், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில், தனியார் பள்ளிகளில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதனால், அரசு பள்ளி மாணவர்களை விட, தனியார் பள்ளிகள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டு தோறும் சரிந்து வருகிறது.

இது குறித்து, மத்திய மனிதவள அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தமிழக பள்ளி கல்விதுறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், அரசு பள்ளி மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு, பயிற்சி அளிக்கும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.முதல் கட்டமாக, நடந்து முடிந்த காலாண்டு தேர்வில், அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்களை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறந்ததும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, எந்த பாடங்களில் மதிப்பெண் குறைந்துள்ளது என்பதை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் படிப்பு திறனை, பெற்றோர் அறியும் வகையில், விடைத்தாள்களை நகல்எடுத்து வழங்க வேண்டும். மாணவர்கள், 'வீக்' ஆக உள்ள பாடங்களில், சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.





Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post