பிளஸ் 2 வரை பொது தேர்வு வினாத்தாள் தயார் : நுண்ணறிவு கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம்

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகளுக்கு, வினாத்தாள் பட்டியல் தயாராகி உள்ளது.
இன்னும் ஒரு மாதத்திற்குள், இறுதி வினாத்தாள் முடிவு செய்யப்பட உள்ளது.அரசு பாட திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பிளஸ் 1 தேர்வை பொறுத்தவரை, மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் போதும். 10ம் வகுப்பில், அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அந்த மதிப்பெண் படி, பிளஸ் 1ல், உரிய பாட பிரிவுகளைப் பெற முடியும். பிளஸ் 2வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், உயர்கல்விக்கு செல்ல முடியும்.நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் விபரங்களை சேகரிக்கும் பணி முடிவுக்கு வந்துள்ளது. இனி, தனி தேர்வர்களுக்கான விண்ணப்ப பதிவுகள் துவங்க உள்ளன. இந்த ஆண்டு முதல், தனி தேர்வர்களுக்கு மார்ச் மற்றும் ஜூனில் மட்டுமே தேர்வு நடத்தப்பட உள்ளது. அக்டோபர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான, வினாத்தாள் பட்டியலை, அரசு தேர்வு துறை தயாரித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் திறமையான ஆசிரியர்கள், பாட வாரியாக வினாத்தாள்களை தயார் செய்து கொடுத்துள்ளனர்.ஒவ்வொரு பாடத்திற்குள், 10க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள வினாக்களை எடுத்தோ அல்லது ஏதாவது ஒரு வினாத்தாளையோ, தேர்வு துறை இறுதி செய்யும். இன்னும் ஒரு மாதத்திற்குள் இறுதி வினாத்தாள் தயார் செய்யப்பட்டு, அவை, அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, ரகசியமாக வைக்கப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆண்டு, 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மிக கடினமான கேள்விகள் இன்றி, மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் கேள்விகள் அதிகம் இடம்பெறும் என, தெரிகிறது.மாணவர்களை பொறுத்தவரை, புத்தகத்தில் உள்ள மாதிரி கேள்விகள் மற்றும் பாடத்தின் பின்பக்க கேள்விகளை மட்டுமின்றி, பாடங்களின் அனைத்து அம்சங்களையும் படிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், பாடங்களின் எந்த பகுதியில் இருந்தும், புதிய கேள்விகள் இடம் பெறும் என, தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post